Published : 16 Oct 2020 07:38 PM
Last Updated : 16 Oct 2020 07:38 PM

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை வேலை அளிப்போர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்; தவறினால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை

புலம்பெயர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், வேலையளிப்போர் கட்டாயம் அவர்களது விவரங்களை அரசின் சம்பந்தப்பட்ட அலுவலர், அதற்கென உருவாக்கப்பட்ட வலைதளத்தில் பதிவு செய்யவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“மாநிலங்களுக்கிடையிலான புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம், 1979-ன்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் அனைத்து வேலையளிப்போரும், பணியமர்த்தப்பட்ட புலம் பெயர்ந்த பணியாளர்களின் முழு விவரங்களை உரிய அலுவலரிடம் ((appropriate authority) பதிவு செய்ய வேண்டும்.

தமிழக அரசால் இதற்கென பிரத்யேகமான வலைதளம் (labour.tn.gov.in/ism) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்வதை எளிமைப்படுத்தும் வகையில் அனைத்து தொழிற்சாலைகள்/ கட்டிட ஒப்பந்ததாரர்கள்/ வணிக நிறுவனங்களுக்கு தனியாக உள்நுழைவு (login) மற்றும் கடவுச்சொல் (password) அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சில வேலையளிப்போர்கள் இதனைச் சரிவரப் பதிவு செய்யாமல் இருப்பது தெரியவருகிறது. எனவே, உடனடியாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் முழுவிவரங்களை மேற்படி வலைதளத்தில் எவ்வித விடுபடுதலுமின்றி பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

இதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் தொழிற்சாலைகள்/ கட்டிட ஒப்பந்ததாரர்கள்/ வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x