

கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியைத் திறக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கும், கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு தலைமை நிர்வாக அதிகாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த மார்ச் மாதம் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமானதைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கிய கனிகள் மற்றும் பூக்கள் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் கடந்த மே மாதம் முதல் வாரத்திலும் மூடப்பட்டன.
பின்னர், மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் தற்காலிகமாக செயல்படத் தொடங்கின.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த தமிழக அரசு, உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 18-ம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 28-ம் தேதியும் திறந்தன.
இந்நிலையில், கனி மொத்த விற்பனை அங்காடியைத் திறக்க உத்தரவிடக் கோரி சென்னை கோயம்பேடு 4-வது நுழைவுவாயில் கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் எம்.செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகச் சந்தையில் போதுமான வசதிகள் இல்லை எனவும், 700 பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில், அங்கு 200 வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற வியாபாரிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று (அக். 16) விசாரணைக்கு வந்தபோது, கோயம்பேடு கனிகள் மொத்த அங்காடியை திறக்கக் கோரி அளித்த மனுவை, உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் பரிசீலித்த அரசு, படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என மழுப்பலாகப் பதில் அளித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
ஆயுதபூஜை வருவதால் கனிகள் மொத்த அங்காடியைத் திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும், சில்லறை விற்பனைக்கு அனுமதியளித்ததே தொற்றுப் பரவலுக்குக் காரணம் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோயம்பேடு அங்காடி பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பணிகள் முடிந்து ஆய்வு மேற்கொண்டபின் படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் எனவும், தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது சம்பந்தமாக புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், மனுவுக்கு டிசம்பர் 14-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக நகராட்சி நிர்வாக செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் சந்தை நிர்வாகக் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.