Last Updated : 16 Oct, 2020 01:02 PM

 

Published : 16 Oct 2020 01:02 PM
Last Updated : 16 Oct 2020 01:02 PM

கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது: அரசுப் பள்ளி மாணவர்கள் உள் ஒதுக்கீடு வழக்கு விசாரணையில் கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்

மதுரை

மருத்துவ இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன் அதனாலேயே ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா? என எண்ணுவதாக தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும், முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், "அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இடங்களை வழங்குவதில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதுடன், அதனடிப்படையில் அறிக்கையும் தாக்கல் செய்தது.

அரசு இதற்கு ஒப்புதல் வழங்கி ஆளுநரின் இசைவுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாகத் தெரிகிறது.

ஆகவே, மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான உள் ஒதுக்கீட்டு இட ஒதுக்கீடு தொடர்பான முடிவு எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாக அரசு நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவும், இந்தக் கல்வி ஆண்டிலேயே, மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தலைமை வழக்கறிஞர், ”மருத்துவ இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு
தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆளுநர் சட்டமசோதா குறித்து 1. ஏற்கலாம், 2. நிராகரிக்கலாம், 3.பரிசீலிக்குமாறு கூறலாம். 4. திருப்பி அனுப்பலாம். இந்த 4 முடிவுகளில் ஏதேனும் ஒன்றை எடுக்கலாம்" எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், " இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அதிகாரிகள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, விரைவாக முடிவெடுக்க வேண்டும்.

தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரும் ஜல்லிக்கட்டிற்கு பின்பாக ஒன்றிணைந்து இந்த சட்ட மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள். உணவில்லாத, சமூக ரீதியாக பின்தங்கிய ஏழைகளே பெரும்பாலும் அரசுப்பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்களின் வாழ்க்கை தொடர்ந்து இவ்வாறு வாடட்டும்" என விட்டுவிடலாமா? எனக் கேள்வி எழுப்பினர்.

முறையாகக் குழு அமைத்து குழுவின் பரிந்துரையில் சட்ட மசோதா நிறைவேற்றியும், தாமதம் ஆகி, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படலாமா? எனவும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசுத் தலைமை வழக்கறிஞர், "சட்டமசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது. காலக்கெடுவையும் விதிக்க இயலாது" எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள்," முடிவெடுக்க 1 மாத காலம் போதாதா? முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், சட்ட மசோதா தொடர்பான முடிவெ வெளியாகி என்ன பயன்? எடுக்கும் முடிவு என்னவாயினும், முன்பாகவே அதனைத் தெரிவிக்கலாமே?" எனக் கேள்வி எழுப்பினர்.

அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பதன் மூலம் உளவியல் ரீதியாக அவர்கள் எவ்வாறு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்பது தெரியவருகிறது.

மேலும், உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் இடம்பெறுவது அதிகரிக்கும் என ஊடகங்கள் மூலம் தெரியவருகிறது. 4,5 லட்சம் ரூபாய் செலவழித்து, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற இயலாத நிலையில் உள்ளனர்.

கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண் கலங்கிய நீதிபதி அதன் காரணமாகவே ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா? என எண்ணுவதாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஒற்றை இலக்கங்களில் மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெறுவது அதிக வருத்தமளிக்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குழுவின் பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, முடிவெடுக்கப்படும் என நம்புகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் மேலும் ஒரு ஆண்டை அரசுப்பள்ளி மாணவர்கள் இழக்க வேண்டாம் என எண்ணுகிறது எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர், எப்போது கலந்தாய்வு, மருத்துவக்கல்லூரி இடங்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை மதியம் 1 மணிக்கு ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து, சட்ட மசோதா தொடர்பான ஆளுநரின் முடிவு வெளிவரும்வரை, தமிழக மருத்துவ இடங்கள், கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடாது என தமிழக அரசுத்தரப்பில் உறுதி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x