Published : 16 Oct 2020 11:35 AM
Last Updated : 16 Oct 2020 11:35 AM

மாணவர் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தேவையில்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன் உறுதி

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.பி.அன்பழகன்.

தருமபுரி

மாணவர் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் தேவையில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி அடுத்த நூல அள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று (அக். 16) கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் உயர் சிறப்பு தகுதி, தமிழக மாணவர்களுக்கான 69% இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும் நிலை உள்ளது. அதேபோல, நுழைவுத் தேர்வு முறை, கட்டண உயர்வு போன்றவற்றையும் தமிழக அரசு ஏற்காது.

தமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்பு தகுதியை தமிழக அரசு அனுமதிக்காது. மேலும், ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்திலான கல்வியை வழங்கி வருகிறது. இது தவிர, தரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற சூழலுக்கு ஏற்ப தமிழக அரசே கூடுதல் நிதி வழங்கி நிர்வகிக்கும்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் தொடர் நடவடிக்கை அமையும்.

பிளஸ் 2 உடனடித் தேர்வில் வென்ற மாணவர்கள் தமிழக அரசு கலைக் கல்லூரிகளில், வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பித்து சேர்க்கை பெற்று பயன்பெறலாம்".

இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x