Published : 16 Oct 2020 11:14 AM
Last Updated : 16 Oct 2020 11:14 AM

நெல்லை, குமரி, தென்காசியில் கனமழை நீடிப்பு; நீர்வரத்து அதிகரிப்பால் வேகமாக நிரம்பும் அணைகள்: மலையோர கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் 4-வது நாளாக நேற்று கனமழை நீடித்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துவருகிறது. மலையோர கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ராமநதி அணை நிரம்பியது

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் குளிர்ச்சி நிலவுகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் ராமநதி அணை, குண்டாறு அணையில் தலா 35 மி.மீ. மழை பதிவானது. அடவிநயினார் அணையில் 30 மி.மீ., கடனாநதி அணையில 22, கருப்பாநதி அணையில் 19.50, செங்கோட்டையில் 18 , தென்காசியில் 16.40 , ஆய்க்குடியில் 6.20 , சிவகிரியில் 1 மழை பதிவானது.

தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை, அடவிநயினார் அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பி விட்டதால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை இந்த ஆண்டில் 3-வது முறையாக தற்போது நிரம்பியது. பாதுகாப்பு கருதி அணை நீர்மட்டம் 82 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

இதேபோல், 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் மூன்றேகால் அடி உயர்ந்து 80 அடியை எட்டியது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 69.23 அடியாக இருந்தது. குற்றாலத்தில் 4-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மலையோர கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இரணியலில் அதிகபட்சமாக 52 மிமீ மழை பெய்துள்ளது.

சிற்றாறு ஒன்றில் 41, கன்னிமாரில் 20, குழித்துறையில் 18, நாகர்கோவிலில் 15, பேச்சிப்பாறை, பெருஞ்சாணியில் தலா 26, புத்தன் அணையில் 25, சிவலோகத்தில் 41, சுருளோட்டில் 31, தக்கலையில் 28, குளச்சலில் 36, பாலமோரில் 38, மாம்பழத்துறையாறில் 27, கோழிப்போர்விளையில் 20, அடையாமடையில் 37, குருந்தன்கோட்டில் 21, முள்ளங்கினாவிளையில் 22 மற்றும் ஆனைக்கிடங்கில் 34 மிமீ மழை பெய்திருந்தது.

கனமழையால் ஆறு, கால்வாய் களில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு அணைகளுக்கு, ஏற்கெனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நேற்று காலை 42.60 அடியை எட்டியது. விநாடிக்கு 3,169 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது.

ஆறு, கால்வாய்களில் வெள்ளம்

எனவே, அணைப்பகுதி மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மழை நீடிப்பதால் எந்நேரத்திலும் அதிகமான கனஅடி தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு வலியுறுத்தப்பட்டது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.80 அடியாக உயர்ந்தது. 2,434 கனஅடி தண்ணீர் வருகிறது. முக்கடல் அணை 22 அடியாக உயர்ந்தது. மலையோரப் பகுதிகளில் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

போக்குவரத்து துண்டிப்பு

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, கீரிப்பாறை ஆகிய மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மலைச்சாலைகளை மூடியவாறு தண்ணீர் செல்கிறது. மோதிரமலை, குற்றியாறு, முடவன்பொற்றை, குழவியாறு, மிளாமலை பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மோதிரமலை கிழவியாற்றை கடக்க முயன்ற இரு இளைஞர்களை மழைநீர் இழுத்து சென்றது. ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின், அப்பகுதி மக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். சுசீந்திரம், தோவாளை, அருமநல்லூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x