Published : 16 Oct 2020 07:43 AM
Last Updated : 16 Oct 2020 07:43 AM

கே.பாலகிருஷ்ணனிடம் நலம் விசாரித்தார்; இடஒதுக்கீடு உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 12-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

கே.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஆகியோர் நன்கு தேறி வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 100 வயதுமுதியவர், 92 வயது மூதாட்டியை சிறப்பான சிகிச்சை மூலம் அரசு மருத்துவர்கள் குணப்படுத்தி உள்ளனர். அரசு நடவடிக்கையால் கரோனா தாக்கம் குறைந்து வருகிறது.

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உண்மை நிலவரத்தை முழுமையாக அறிந்துகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும்.

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை உயர் நீதிமன்றத்தில் அதிமுக அரசுதான் போராடிப் பெற்றது. 50%இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் சென்று, வாதாடி வருவதும்அதிமுக அரசுதான். நடப்பு ஆண்டில், முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிந்துவிட்டதால், எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் அரசுஉறுதியாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும்.மாநில உரிமைகளை அரசு நிலைநாட்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x