

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீடிக்கும் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7.10 அடியும், சேர்வலாறு நீர்மட்டம் 9.16 அடியும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2.10 அடியும் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் நேற்று மழை நீடித்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 28 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணைக்கு நீர்வரத்து 5940 கனஅடியாக அதிகரித்திருந்தது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நேற்று இந்த அணை நீர்மட்டம் 94.30 அடியாக இருந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஒரே நாளில் 7.10 அடி உயர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 101.40 அடியாக இருந்தது. அணையிலிருந்து 506 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
இதுபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9.16 அடி உயர்ந்து நேற்று 122.64 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2.10 அடி உயர்ந்து 70.90 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு வினாடிக்கு 1464 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மாவட்டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 28, சேர்வலாறு- 27, மணிமுத்தாறு- 3.6, கொடுமுடியாறு- 23, அம்பாசமுத்திரம்- 3, சேரன்மகாதேவி- 1, நாங்குநேரி- 1.50, ராதாபுரம்- 13, திருநெல்வேலி- 1.