Last Updated : 04 Sep, 2015 09:05 AM

 

Published : 04 Sep 2015 09:05 AM
Last Updated : 04 Sep 2015 09:05 AM

சென்னை-மங்களூர் விரைவு ரயில் விருத்தாசலம் அருகே தடம் புரண்டது: 5 பெட்டிகள் கவிழ்ந்தன; 42 பயணிகள் காயம் - தென் மாவட்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு; மீட்பு பணிகள் முடிந்து ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நேற்று அதிகாலை சென்னை-மங்களூர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளா னதில் 42 பயணிகள் காயமடைந் தனர். அதில், பரஞ்சோதி என்பவர் ஆபத்தான நிலையில் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை எழும்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மங்களூர் விரைவு ரயில் புறப்பட்டது. அது, நேற்று அதிகாலை 2 மணி அளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு முன்னதாக பூவனூர் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. ரயிலின் முதல் 18 பெட்டிகள் கடந்து சென்ற நிலையில், 19-வது பெட்டி முதல் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. குளிர்சாதன வசதியுடன் கூடிய 3 பெட்டிகள் நிலை குலைந்தன. மேலும் 2 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் ரயிலில் இருந்த 42 பேர் காயமடைந்தனர்.

ரயில் விபத்து குறித்து தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர், விருத்தாசலம் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். அவர்களுடன் பூவனூர் கிராம மக்களும் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு விருத்தாசலம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்களில், சென்னை யைச் சேர்ந்த பரஞ்சோதி (50), மிகவும் ஆபத்தான நிலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர, கரூர் மாவட்டம் தீத்தப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி (67), சின்னம்மாள் (60), திருச்சியைச் சேர்ந்த பத்மநாபன் (49) ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்துக்கு திருச்சி கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் ராஜ்புரோகித் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். தடம்புரண்ட ரயில் பெட்டிகளைத் தவிர மற்ற பெட்டிகளை திருச்சிக்கு அனுப்பிவைத்தார். மேலும், லேசான காயங்களுடன் தப்பியவர்கள் மற்றும் விபத்தில் சிக்கிய பெட்டிகளில் பயணம் செய்தவர்களை பேருந்துகள் மூலமாக திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பிவைத்தார்.

மாற்றுப்பாதையில் ரயில்கள்

கடலூர் ஆட்சியர் எஸ்.சுரேஷ் குமார், எஸ்பி விஜயகுமார், விழுப்புரம் எஸ்பி நரேந்திரன் நாயர், விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோரும் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினர். விபத்துக்குள்ளான மங்களூர் விரைவு ரயிலில் பயணம் செய்தவர்கள் பற்றிய தகவலை அறிய 044 29015203 என்ற அவசர உதவி எண்ணை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் விபத்து காரணமாக, சென்னை - திருச்சி பாதையில் அனைத்து ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு, பல்லவன், வைகை, அனந்தபுரி, பொதிகை, முத்துநகர், ராக்போர்ட், தாதர், நெல்லை உள்ளிட்ட 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும், விழுப்புரம் - மயிலாடுதுறை, மதுரை- விழுப்புரம், கடலூர் - விருத்தாசலம் இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விபத்து எப்படி ஏற்பட்டது?

விபத்து குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது, சில வாரங்களுக்கு முன்பு தண்ட வாளத்தில் வெல்டிங் செய்யப்பட்ட தாகவும், ரயில்கள் வேகமாக செல்லும்போது வெல்டிங் விடுபட்டு ரயில் தடம் புரண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். எனினும், ரயில்வே பாதுகாப்பு அதிகாரி எஸ்.கே.மிட்டலின் ஆய்வுக்கு பிறகே காரணம் தெரியவரும் என்றனர். மீட்பு பணி மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே கட்டுமான முதன்மை நிர்வாக அதிகாரி வேங்கடசாமி தெரிவித்தார். இந்நிலையில் மீட்புபணிகள், சோதனை ஓட்டம் முடிந்து அந்த மார்க்கத்தில் ரயில்கள் நேற்று இரவு முதல் குறைந்த வேகத்தில் இயங்க தொடங்கின.

சதி வேலையா?

விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் பள்ளிக் கல்வித்துறையில் கண்காணிப் பாளராக பணிபுரிந்து வருகிறார். அவர், தான் எடுத்து வந்த அரசு பணம் ரூ.1.5 லட்சம் திருடு போய் விட்டதாக கடலூர் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு தமிழர் விடுதலைப்படை இயக்கத் தலைவர் தமிழரசன் நினைவு தினம் அனுசரிக்க போலீஸார் மறுப்பு தெரிவித்தனர். மேலும், தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுப.இளவரசனும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ரயில் விபத்து நடந்துள்ளதால் ரயில் கவிழ்ப்பு சதி நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி

முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

‘‘மங்களூர் விரைவு ரயில் தடம்புரண்டு 39 பேர் காயம் அடைந்தனர் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். இவர்களில் 35 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பிவிட்டனர். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x