

மாற்றுத்திறனாளிகளை இழிவாகப் பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, சில தினங்களுக்கு முன்னதாக பாஜக-வில் இணைந்த திரைக்கலைஞர் குஷ்பு அக்-13 அன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்பொழுது காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி எனப் பேசியுள்ளார்.
இவ்வாறாக திரைக்கலைஞர் குஷ்பு பேசியது மாற்றுத்திறனாளிகளை மிகவும் அவமானப்படுத்தும் செயலாகும். எனவே, மாற்றுத்திறனாளிகளை இழிவாகப் பேசிய குஷ்பு மீது மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறையில் புகார் அளிக்கும் இயக்கம் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திலும், மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் பழனி நகர் காவல் நிலையத்திலும், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி தலைமையில் கள்ளிமந்தையம் காவல் நிலையத்திலும் மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசியதற்கு குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
மேலும், மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளிக்கும் இயக்கத்தில் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவ்விவகாரத்தில், குஷ்பு வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.