Published : 15 Oct 2020 08:04 AM
Last Updated : 15 Oct 2020 08:04 AM

‘பெரிய கோயிலில் நவீன மின்விளக்குகளால் சிற்பங்களுக்கு பாதிப்பு இல்லை’

தஞ்சாவூர் பெரிய கோயிலில் அமைக்கப்பட்டுவரும் நவீன மின்விளக்குகளால் சிற்பங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று திருச்சி வட்ட தொல்லியல் கண்காணிப்பாளர் த.அருண்ராஜ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை நேற்று ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய தொல்லியல் துறையில் சென்னை வட்டத்தில் இருந்து, தற்போது திருச்சி வட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், நீலகிரி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை 21 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள 162 புராதனச் சின்னங்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த புதிதாக பிரிக்கப்பட்டுள்ள திருச்சி வட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள புராதனச் சின்னங்களில் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக ஆய்வு செய்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அது சரிசெய்யப்படும்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் தற்போது நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நவம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற விளக்குகள், நாடு முழுவதும் உள்ள புராதனச் சின்னங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விளக்குகளால் கோயிலின் பழமையான தோற்றம் மாறாது. அத்துடன் சிற்பங்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

ஒரு சில புராதனச் சின்னங்களுக்கு உள்ளூர் சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x