அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு உலக அமைதிக்கான வலைதள கருத்தரங்கம்: புத்த மதகுரு தலாய் லாமா பங்கேற்பு 

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு உலக அமைதிக்கான வலைதள கருத்தரங்கம்: புத்த மதகுரு தலாய் லாமா பங்கேற்பு 
Updated on
1 min read

டாக்டர் ஆ.ப.ஜெ அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையும், புத்த மதகுரு தலாய் லாமாவும் இணைந்து, ‘புவிப்பரப்பில் அமைதியான உலகைப் படைக்க இணைந்து செயல்படுதல்’ என்ற தலைப்பில் உலகளாவிய வலைதள கருத்தரங்கம் நாளை நடைபெற உள்ளது.

இதுகுறித்து டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை நிறுவனர் சேக் சலீம் கூறியதாவது: எங்களது அறக்கட்டளை,, ராமேசுவரம் ஹவுஸ் ஆஃப் கலாம், திபெத்திய மதகுரு தலாய் லாமாவும் இணைந்து, ‘புவிப்பரப்பில் அமைதியான உலகைப் படைக்க இணைந்து செயல்படுதல’ என்ற தலைப்பில் உலகளாவிய வலைதள கருத்தரங்கம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 89-வது பிறந்த நாளான நாளை காலை 9 முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது.

உலகளாவிய வலைதள கருத்தரங்கின் தலைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, புத்த மதகுரு தலாய் லாமா கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி வழி நடத்தி, உலக அமைதியின் நன்மைகள் மற்றும் விளைவுகள் குறித்து தலைமை உரையாற்ற உள்ளார். இதில் உலக அளவில் உள்ள பல்வேறு நாடுகளின் மாணவர்கள் உட்பட 50 நபர்கள் பங்கேற்க உள்ளனர்.

சிறப்பு நிகழ்வாக, பல்வேறு நாடுகளின் மாணவர்களில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட 10 மாணவர்கள், உலக அமைதி ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து, தங்களுடைய கேள்விகளை கேட்டு அதற்கான பதிலை, தலாய் லாமாவிடமிருந்து பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைத்தள கருத்தரங்கின் நோக்கம் உலகின் அனைத்து நாடுகளிலும் அமைதியையும், ஒருங்கிணைந்த ஆன்மிக உள் ஒளியையும் பரப்புவதே ஆகும்.

இந்த வலைதள கருத்தரங்கம் திபெத்திய, சீன, ஹிந்தி, வியட்நாம், ரஷ்ய, கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ், ஜெர்மன், போர்ச்சுகீஸ், மங்கோலிய, பிரெஞ்ச், இத்தாலிய மொழி ஆகியவை உள்ளிட்ட 14 மொழிகளில் ஒளிபரப்பப்பட உள்ளது.

உலக அமைதியை அனைத்து நாடுகளிலும் பரப்புவதற்காக, டாக்டர் ஆபஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in