

அடுத்த இரண்டு தினங்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பு:
“வடக்கு உள் கர்நாடக நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், விருதுநகர் , ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்
அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:
சுராலகோடு (கன்னியாகுமரி) 8 செ.மீ, நாகர்கோயில் (கன்னியாகுமாரி) 7செ.மீ, புத்தன் அணை (கன்னியாகுமாரி), பாபநாசம் (திருநெல்வேலி), மைலாடி (கன்னியாகுமாரி) பேச்சிப்பாறை (கன்னியாகுமாரி ), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமாரி) தலா 6 செ.மீ, இரணியல் (கன்னியாகுமாரி), சோலையார் (கோவை) தலா 5 செ.மீ, பூதப்பாண்டி (கன்னியாகுமரி), தூக்கலாய் (கன்னியாகுமாரி) தலா 4 செ.மீ , குளச்சல் l (கன்னியாகுமாரி), தென்காசி, பெரியாறு (தேனி) தலா 3 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
அக்டோபர் 14 அன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அக்டோபர் 14,15 ஆகிய தேதிகளில் கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அடுத்த இரண்டு தினங்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர் அலை முன்னறிவிப்பு :
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் கீழக்கரை வரை அக். 15 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.5 முதல் 3.4 மீட்டர்வரை எழும்பக்கூடும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.