

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி உண்ணாமலைக் கடையில் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக சட்டக்கல்லூரி மாணவி நந்தினியையும், அவரது தந்தையையும் போலீஸார் நேற்று கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
பூரண மதுவிலக்கு கோரி பல்வேறு பகுதிகளில் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். தனது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காந்தியவாதி சசிபெருமாள் உயிர்நீத்த மார்த்தாண்டம் அருகே உள்ள உண் ணாமலைக்கடைக்கு நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் நேற்று காலை வந்தனர். அங்கு சசிபெருமாள் உயிர்நீத்த செல்பேசி டவர் அருகே அமர்ந்து நந்தினியும், ஆனந்தனும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக நந்தினியையும், ஆனந்தனையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மாலையில் அவர்களை விடுவித்தனர்.