Last Updated : 14 Oct, 2020 04:16 PM

 

Published : 14 Oct 2020 04:16 PM
Last Updated : 14 Oct 2020 04:16 PM

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் கண்காணிக்கப்படுகின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. இருப்பினும் அதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும், சிகிச்சை அளிப்பதையும் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

இதற்காக பறக்கும் படை அமைக்க வேண்டும். கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தனியார் மருத்துவமனையைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் யார் யார் இடம் பெற்றுள்ளனர்? எத்தனை மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கரோனா சிகிச்சை கட்டணம் குறித்து தனியார் மருத்துவமனைகளில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக். 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x