Published : 14 Oct 2020 01:02 PM
Last Updated : 14 Oct 2020 01:02 PM

ராகவேந்திரா மண்டப சொத்துவரியை குறைக்கக்கோரி ரஜினிகாந்த் வழக்கு: உயர் நீதிமன்றம் எச்சரிக்கையை அடுத்து வாபஸ் 

ராகவேந்திரா திருமணமண்டபம் சொத்துவரியை குறைக்கவும், அபராதம் சம்பந்தமாக மாநகராட்சிக்கு உத்தரவிடவும் கோரி நடிகர் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கடுமையாக எச்சரித்து, அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்ததை அடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று பரவலை அடுத்து மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் கடுமையான கட்டுப்பாடுகளாக பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டது. அதன்படி திருமண விழாக்கள் ரத்து செய்யப்பட்டு, மண்டபங்கள் மூடப்பட்டன. இதன் பின்னர் செப்டம்பர் மாதத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே மண்டபங்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன.

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபமும் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்த மண்டபத்திற்கு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பேரிடர் காலத்தில் இந்த தொகையை பாதியாக நிர்ணயிக்க விதிகள் உள்ளதால், அதுதொடர்பாக குறைத்து முடிவெடுக்கும்படி செப்டம்பர் 23-ம் தேதி மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது உரிய முடிவெடுக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி செலுத்தியுள்ளோம். சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தி வருகிறோம். கரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய - மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபத்தை யாருக்கும் வாடகைக்கு விடவில்லை. மார்ச் 24ம் தேதி பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கியுள்ளோம்.

அக்டோபர் 15-ம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் 2 சதவித அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது. மண்டபம் காலியாக இருந்ததால் மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதால் அதன்படி நிர்ணயிக்க கோரி மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை சொத்து வரி மீது அபராதம் மற்றும் வட்டியை வசூலிக்க தடை விதிக்க வேண்டும்”. என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த முன் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ரஜினி தரப்பில் “பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்”, என வாதிடப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23-ம் தேதி கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29-ம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்

மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும்? நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா? என தொடர்ந்து கேள்வி எழுப்பினர். நடவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றவில்லையா? நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா? என்றும் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். அதன்பின்னர் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து, அதற்கான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கின் மீதான உத்தரவை மாலை பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x