Last Updated : 13 Oct, 2020 06:52 PM

 

Published : 13 Oct 2020 06:52 PM
Last Updated : 13 Oct 2020 06:52 PM

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பாரம்பரிய முறைப்படி பவனி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் மரியாதை

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் இன்று பாரம்பரிய முறைப்படி பவனியாக கொண்டு செல்லப்பட்டது.

அம்மனின் வாகனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் அணிவகுப்புடன் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்தே ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இது சுவாதி திருநாள் மகாராஜாவின் காலத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் பவனி மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

பின்னர் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை சுவாமி விக்ரகங்கள் அடையும். பின்னர் அங்குள்ள கோட்டைக்ககம் நவராத்திரி கொலு மண்டபத்தில் சரஸ்வதி தேவி விக்ரகமும், ஆரியசாலை சிவன் கோயிலில் வேளிமலை முருகனும், செந்திட்டை அம்மன் கோயிலில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அமமனும் வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் செய்யப்படும்.

பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த நவரராத்திரி சுவாமி விக்ரக பவனி, இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வாகனங்களில் ஒரே நாளில் எடுத்து செல்லப்பட்டு பூஜைகள் நடத்த தமிழக, கேரள இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

இதற்கு குமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறைப்படியே பக்தர்கள் சுமந்து சுவாமி விக்ரகங்களை நவராத்திரி விழாவிற்கு பவனியாக கொணடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக நேற்று தமிழக, கேரள அரசு அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் காணொளி காட்சி மூலம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அப்போது யானை, மற்றும் குதிரை பவனிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது.

பிற நிகழ்வுகள் சமூக இடைவெளியுடன் நடத்துவதற்கும் சுவாமி விக்ரகங்கள் வழக்கம்போல் இல்லாமல் சிறிய பல்லக்கு வாகனத்தில் பக்தர்கள் சுமந்து செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

அதன்படி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து நாளை (14ம் தேதி) நவராத்திரி பவனி தொடங்குகிறது. இதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பாடு இன்று காலை நடந்தது. சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வாகன புறப்பாடு நடைபெற்றது.

8 பக்தர்கள் மட்டுமே அம்மனின் வாகனத்தை சுமந்து வந்தனர். அப்போது பாரம்பரிய முறைப்படி போலீஸார் துப்பாக்கி ஏந்தி அரசு மரியாதை செய்தனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கேரளா போலீஸார் இம்முறை பக்கேற்காததால் எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் போலீஸார் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் குமரி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், மற்றும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றர்.

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் தாணுமாலய சவாமி கோயிலை சுற்றி வலம் வந்தபோது ரதவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் மலர்தூவி அம்மனை திருவனந்தபுரத்திற்கு வழியனுப்பி வைத்தனர்.

அம்மன் பவனி மாலையில் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயிலை அடைந்தது. இதைப்போல் நாளை காலை வேளிமலை முருகன் விக்ரகம் பத்மநாபபுரம் அரண்மனையை அடைகிறது.

அங்கிருந்து அரண்மனையில் உள்ள சரஸ்வதி தேவி விக்ரகத்துடன் 3 சுவாமி விக்ரகங்களும் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அப்போது பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதில் தமிழக, கேரள போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x