Published : 13 Oct 2020 05:07 PM
Last Updated : 13 Oct 2020 05:07 PM

கடலோர ஆந்திராவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: 16 மாவட்டங்களில் மிதமான மழை; 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

ஆந்திரக் கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடலோர ஆந்திராவில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழையும், 3 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“நேற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி அளவில் ஆந்திரக் கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்து, தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

வால்பாறை (கோவை) 11 செ.மீ., சின்னக்கல்லாறு (கோவை) 9 செ.மீ., சோலையாறு (கோவை), நடுவட்டம் (நீலகிரி) தலா 8 செ.மீ., அவலாஞ்சி (நீலகிரி), சின்கோனா (கோவை) தலா 7 செ.மீ., சோளிங்கர் (ராணிப்பேட்டை), சுராலகோடு (கன்னியாகுமாரி), பெரியாறு (தேனி), பாபநாசம் (திருநெல்வேலி ) தலா 5 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

கடல் உயர் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை அக்டோபர் 13 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.8 முதல் 3.8 மீட்டர்வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x