Published : 13 Oct 2020 02:49 PM
Last Updated : 13 Oct 2020 02:49 PM

திமுகவுக்கு உரிமைக்குழு அனுப்பிய  இரண்டாவது நோட்டீஸுக்கு விதித்த இடைக்காலத் தடை; நீக்கக் கோரி பேரவைச் செயலர் மேல்முறையீடு: உயர் நீதிமன்றம் மறுப்பு

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் இரண்டாம் முறை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து தடையை நீக்கக் கோரி பேரவைச் செயலர், உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இடைக்காலத் தடையை நீக்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.

2017-ல் சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களைக் கொண்டுவந்த விவகாரத்தில் உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் முன்னிலையில் கடந்த செப்.24 அன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “2017-ல் அனுப்பிய நோட்டீஸில் அடிப்படைத் தவறு இருப்பதாக கூறி அதை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. குட்கா வைத்திருந்தால் அது குற்றமா இல்லையா என்பது நீதிமன்றத்தில் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே விவகாரத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதத்தில், “போதைப் பொருள் வணிகத்திற்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதிக்கவில்லை. அதனடிப்படையில்தான் குட்கா கிடைப்பது குறித்த பிரச்சினை பேரவையில் எழுப்பப்பட்டது. உள்நோக்குடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் அமீத் ஆனந்த் திவாரி வாதத்தில், “ஏற்கெனவே ஒரு பக்கச் சார்புடன் நடவடிக்கை எடுத்த அதே குழுதான் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரவை விதி 228-ஐ மீறும் வகையில் மீண்டும் குழு அமைக்கப்பட்டு, குட்கா விவகாரத்தில் அனுப்பப்பட்டுள்ளது. திமுக மீது முழுக்க அதிருப்தியில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் குழுவில் இருக்கிறார்” என வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்து பேரவைச் செயலாளர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதத்தில், “பேரவை விதி 226-ன் அடிப்படையில் உரிமை மீறல் எனப் பேரவைத் தலைவர் தானாக முன்வந்து உரிமைக் குழுவுக்குப் பரிந்துரைக்கலாம். பேரவையில் நடந்தவற்றின் வீடியோ பதிவுகளை முழுமையாகப்பார்த்த பிறகுதான் ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

குட்கா பாக்கெட்டைக் காண்பித்ததை அனுமதிக்க முடியாது எனப் பேரவைத் தலைவர் பலமுறை கூறியுள்ளார். அதனால் இது உரிமை மீறல்தான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கண்ணை உருட்டி, நாக்கைத் துருத்தியதையும் உரிமை மீறலாகக் கருதி 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. பேரவைத் தலைவருக்குப் பரிந்துரை மட்டுமே செய்யும். பேரவைத் தலைவர்தான் முடிவெடுப்பார். இன்றோ நாளையோ அடுத்த வாரமோ பேரவை கூடப்போவதில்லை. எனவே தடை விதிக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணன், “பேரவை உரிமைக்குழு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை, பேரவைக்குள் குட்கா விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களுக்கு அனுப்பபட்ட நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும். பேரவைத் தலைவர், செயலாளர், உரிமைக்குழு, உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளிக்க வேண்டும், மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும்'' என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பேரவைச் செயலாளர், உரிமைக்குழு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

பேரவைச் செயலாளர் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அடிப்படைத் தவறுகள் களையப்பட்டு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல் நோட்டீஸில் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வந்ததற்காக எனக் கூறிய நிலையில், இரண்டாவது நோட்டீஸில் பேரவைத் தலைவர் அனுமதி பெறாமல் குட்கா பொருளைக் காட்டி இடையூறு ஏற்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என விளக்கம் அளிக்கபட்டது.

பேரவை உரிமைக்குழு தரப்பில் அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி, “ உரிமை பிரச்சினை என்பது முழுக்க முழுக்க சட்டப்பேரவை அதிகாரத்திற்கு உட்பட்டது, உரிமைக்குழு நோட்டீஸுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். பின்னர் குழு ஆராய்ந்து சட்டப்பேரவைக்கு முடிவை அறிவிக்கும். எனவே முகாந்திரம் இல்லாமல் விதிக்கப்பட்ட தடையை நிறுத்திவைக்க வேண்டும்” என வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டாவது நோட்டீஸுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டனர். மேல்முறையீடு மனுக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x