Published : 13 Oct 2020 11:45 AM
Last Updated : 13 Oct 2020 11:45 AM

சென்னை மாநகராட்சியில் 21% பேருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட மாலை நேர மருத்துவ முகாம்களில் 1,107 நபர்கள் பயனடைந்துள்ளனர் என, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று (அக். 12) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

"கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் 11.10.2020 வரை 58 ஆயிரத்து 493 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 30 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை மற்றும் 6 மணி முதல் 8 மணி வரை மண்டலத்திற்கு 2 மருத்துவ முகாம்கள் என பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் 30 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மேலும், மாநகராட்சியின் 36 மருத்துவமனைகளில் மாலை 5 மணிமுதல் 8 மணி வரை சிறப்பு மாலை நேர மருத்துவ முகாம்கள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் 10.10.2020 முதல் இதுவரை 1,107 நபர்கள் சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் Sero Survey (கரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி) மக்களிடையே கண்டறிய 12 ஆயிரத்து 460 ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் ஐந்தில் ஒரு பங்கு (21%) மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மார்ச் 17 முதல் தற்போது வரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 14 நபர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 848 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 13 ஆயிரத்து 751 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 11.10.2020 அன்று வரை 15 லட்சத்து 74 ஆயிரத்து 334 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 7 லட்சத்து 93 ஆயிரத்து 766. இவை ஒரு மில்லியனுக்கான சோதனையில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 601 ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது 01.04.2020 முதல் 10.10.2020 வரை ரூ.2.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x