Published : 13 Oct 2020 08:23 AM
Last Updated : 13 Oct 2020 08:23 AM

சிறுமி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்ய பரிந்துரை: உள்துறை செயலருக்கு திண்டுக்கல் ஆட்சியர் கடிதம்

வடமதுரை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி கடிதம் எழுதியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குரும்பபட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுமி 2019 ஏப்.16-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

செப்டம்பர் 29-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட கிருபானந்தன் என்ற இளைஞர் விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தினர் மாநில அளவில் முடிதிருத்தும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இவ்வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி.க்கள் ஜோதிமணி, வேலுச்சாமி, அர.சக்கரபாணி எம்எல்ஏ ஆகியோர் இறந்த சிறுமியின் குடும்பத்தினருடன் சென்று மனு அளித்தனர். அப்போது அரசுக்குப் பரிந்துரை செய்வதாக ஆட்சியர் உறுதியளித்தார்.

இதையடுத்து தமிழக உள்துறை செயலருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த பரிந்துரையை உள்துறை செயலர் பரிசீலனை செய்து சிறுமி வழக்கில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுப்பார் என்றும், அரசின் பதில் கடிதம் கிடைத்த பிறகு மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x