நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய கோரிய திமுக எம்எல்ஏ வழக்கில் போலீஸ் பதிலளிக்க உத்தரவு

நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய கோரிய திமுக எம்எல்ஏ வழக்கில் போலீஸ் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

தனக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை திமுக எம்எல்ஏவும், முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மா.சுப்ரமணியன், தனது மனைவி காஞ்சனா பெயருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக மாற்றியுள்ளதாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.பார்த்திபன் கிண்டி போலீஸில் புகார் அளித்தார்.

மோசடி வழக்கு

அதன்பேரில் கிண்டி போலீஸார் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தற்போது எம்பி,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வரும் 15 -ம்தேதி மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராகவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும் மா.சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

கீழமை நீதிமன்றத்தில்..

இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதி, மனுதாரர்இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றத்தில் நேரில்ஆஜராவதில் விலக்கு கோருவது தொடர்பாக அங்கேயே மனு தாக்கல் செய்யலாம் என்றும், வழக்கை ரத்து செய்வது தொடர்பாக போலீஸார் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 18-க்குதள்ளி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in