

பொங்கல் விழாவிற்கு மண்அடுப்பு, மண்பானைகளை அரசு நேரடியாக கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி, வெல்லம், முந்திரி, கரும்பு ஆகியவை வழங்கிவருகிறது.
இவற்றுடன் குடும்ப அட்டைதாரரர்களுக்கு மண் அடுப்பு, மண்பானைகளை இலவசமாக வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும். மழைகாலம் நிவாரணம் கிடைத்திட வழிவகைசெய்யவேண்டும்.
அறநிலையத்துறை கோயில்களில் மண்விளக்கு, மண்பொம்மைகள் விற்பனை செய்ய வாரியத்தில் பதிவு செய்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இடம் வழங்கவேண்டும்.
தங்களது ஐந்து அம்சகோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாவட்டத்தலைவர் சக்திவேல் தலைமையில் மண்பாண்டங்களுடன் வந்து மனு அளித்தனர்.