Published : 12 Oct 2020 03:26 PM
Last Updated : 12 Oct 2020 03:26 PM

9 மாவட்டங்களில் ரூ.10,055 கோடி முதலீட்டில் 14 தொழில் நிறுவனங்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து

தமிழகத்தில் ரூ.10,055 கோடி ரூபாய் முதலீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் தொடங்க முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 9 மாவட்டங்களில் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தொழில்துறை சார்பில், சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 10,055 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று (12.10.2020) தலைமைச் செயலகத்தில், கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டங்களின் மூலம், சுமார் 7,000 நபர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலகப் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழச் செய்திடவும் தமிழக முதல்வர் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் பயனாக, இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31,464 கோடி ரூபாய் முதலீடுகளுக்குக் கையெழுத்திடப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, 14 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. தற்போது நிலவி வரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 14 திட்டங்களில், 4 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும், 10 திட்டங்களுக்கு நேரடியாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

காணொலிக் காட்சிகள் மூலமாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள்

1. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், 6,300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் JSW Renewable Energy Limited நிறுவனத்தின், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) திட்டங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

2. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Mantra Data Centres நிறுவனம், சென்னைக்கு அருகில் 750 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

3. Aosheng Hitech Limited நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கார்பன் ஃபைபர் தகடுகள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

4. சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Vans Chemistry நிறுவனம், 50 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 750 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் கழிவு மேலாண்மை வசதி, மறுசுழற்சி மற்றும் விலை மதிப்புமிக்க உலோகங்களைச் சுத்திகரித்தல் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

நேரடியாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள்

5. காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில், Apollo Tyres நிறுவனம், 505 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், டயர்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

6. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் Hiranandani குழுமத்தைச் சேர்ந்த Greenbase Industrial Parks நிறுவனம், 750 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Industrial Logistics Park அமைத்திடும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

7. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த TPI Composites நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Wind Blades உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்நிறுவனம், 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இப்பொழுது இந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

8. Li-Energy நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 325 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சார வாகனங்களுக்கான மின்கலன் பொதிகள் (EV battery packs) உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

9. திருவள்ளூர் மாவட்டத்தில், தென்கொரிய நாட்டைச் சேர்ந்த LS Automotive Pvt. Ltd நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மோட்டார் வாகனங்களுக்கான Switches உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

10. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிப்காட் கங்கைகொண்டான் தொழிற் பூங்காவில், Britannia நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Biscuits தயாரிக்கும் விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்நிறுவனம், 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டது. இப்பொழுது இந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

11. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் Inox Air Products நிறுவனம், 150 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 105 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Liquid Oxygen உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்த நிறுவனம் கோவிட் சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜனை தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

12. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், தென் கொரிய நாட்டைச் சேர்ந்த Hyundai Wia நிறுவனம், 109 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

13. சென்னை, அம்பத்தூரில், Grinn Tech Motors & Services நிறுவனம், 90 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Battery and BMS உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

14. திருவள்ளூர் மாவட்டத்தில் Counter Measures Technologies நிறுவனம், 51 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துப் பொருட்கள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்த திட்டம் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருந்தடத்தில் அமையவுள்ளது.

என மொத்தம், 14 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 10,055 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 7,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் நீரஜ் மித்தல், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x