

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம பெண் உதவியாளர் ஒருவர் இன்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சாத்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு மகன் ஒருவர் உள்ளார்.
கணவனை இழந்த ராஜேஸ்வரி கடந்த 2014-ம் ஆண்டு சாத்தூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி உதவியாளராக பணியில் சேர்ந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவர் மனநிலை பாதித்தவர் எனக்கூறி கடந்த 2014-ம் ஆண்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றம் மூலம் மீண்டும் பணியில் சேர்ந்த ராஜேஸ்வரி வெம்பகொட்டை அருகே உள்ள அச்சன்குளத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பனையடிப்பட்டி ஊராட்சியில் கிராம உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த ராஜேஸ்வரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி நடமாடும் நியாயவிலை கடைகளை திறந்து வைத்து முதல்வர் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கும்பொழுது கிராம பெண் உதவியாளர் ராஜேஸ்வரி தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை எடுத்து அங்கிருந்த சூலக்கரை போலீஸார் ராஜேஸ்வரியை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.