Published : 12 Oct 2020 12:35 PM
Last Updated : 12 Oct 2020 12:35 PM

தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலி முகக்கவசங்கள் தயாரித்தால் நடவடிக்கை: ராம்ராஜ் நிறுவனம் எச்சரிக்கை

ராம்ராஜ் நிறுவனத்தின் பெயரில் போலி முகக்கவசங்கள் தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் சந்தை என்ற பெயரில் இயங்கும் பேஸ்புக் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி ஆர்.எஸ்.சீனு என்பவர் குறைந்த விலையில் ராம்ராஜ் நிறுவனத்தின் முகக்கவசம் கிடைக்கும் என பதிவிட்டுள்ளார். விசாரித்ததில் அவை போலியானவை எனக்கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக திருப்பூர் கொங்கு பிரதான சாலை எம்.எஸ்.நகரைச் சேர்ந்த சீனு (30), கே.வி.ஆர்.நகரைச் சேர்ந்த நேர்மைநாதன் (32), ராம்ராஜ் நிறுவனத்தின் லோகோவை பிரிண்ட் செய்த மாஸ்கோ நகரைச் சேர்ந்த முருகன் (32) ஆகியோரை திருப்பூர் மாநகரமத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலியாக தயாரிக்கப் பட்ட முகக்கவசங்கள், லோகோஸ்டிக்கர் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

இதுகுறித்து ராம்ராஜ் நிறுவனத்தினர் கூறும்போது, ‘‘கரோனா தொற்றை தடுப்பதற்காக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் பல சிறப்பு அம்சங்களுடன் முகக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறது.

ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி பொல்யூஷன் போன்ற அம்சங்களுடன் மூன்று அடுக்குகளுடன் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராம்ராஜ் பெயரைப் பயன்படுத்தி போலியாக தரம் குறைவான முகக்கவசம் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

இதுபோன்று இன்னும் சிலர் ராம்ராஜ் நிறுவன முத்திரையை பயன்படுத்தி போலியாக தரம் குறைந்த முகக்கவசங்களை தயாரித்து வருகின்றனர். அவர்களை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x