Published : 12 Oct 2020 12:29 PM
Last Updated : 12 Oct 2020 12:29 PM

பழமையான அரச மரம் மறுநடவு: மலர்தூவி வழியனுப்பிய மக்கள்

திருப்பூரில் மாநகராட்சிக்குரிய இடத்தில் இருந்த பழமையான அரச மரம், மறுநடவு செய்யப்பட்டது.

திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் இருந்தது. அந்த இடத்தில் சமுதாயக் கூடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்ட நிலையில், அந்த மரத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையறிந்த, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளரும் இயற்கை ஆர்வலருமான இளங்கோ என்பவர், காளம்பாளையம் பகுதியில் தான் அமைக்கவுள்ள பறவைகள் சரணாலயப் பகுதியில் அரசமரத்தை மறுநடவு செய்ய அனுமதி கேட்டு மாநகராட்சிக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கான அனுமதிகிடைத்ததை தொடர்ந்து, அரசமரம் வேருடன் தோண்டப்பட்டு, மேற்கண்ட இடத்தில் மறுநடவு செய்யப்பட்டது. மரத்துக்கு பூஜை செய்து மலர் தூவி, அப்பகுதி மக்கள் வழியனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இளங்கோ கூறும்போது, ‘‘இந்த மரம் 90 வயது பழமையானது, 80 அடிக்கு மேல் உயரமும், 15 டன் எடையும் கொண்டுள்ளது. இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் வேருடன் பெயர்க்கப்பட்டு, மறுநடவு செய்யும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. நம்மாழ்வார் முறைப்படி கரும்பு சர்க்கரை, நாட்டுமாடு கோமியம், சாணம் ஆகியவை கலந்த அமிர்த கரைசல், வேப்ப புண்ணாக்கு கரைசல், தென்னை நார் ஆகியவை ஒரு வாரத்துக்கு முன் இடப்பட்டிருந்த குழியில் மறுநடவு செய்யப்பட்டது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x