சிறுமிகள், சிறார் மீதான அனைத்து பாலியல் வன்கொடுமை வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு
கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள் சிறார்கள் மீதான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கமாக எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மனுவாகத் தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் அய்யனார் என்பவர் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த முறையீட்டை முன்வைத்தார்.
அதில், "தமிழகத்தில் தொடர்ச்சியாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. 2012ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில் அது முறையாக நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அது முறையாக நடைமுறைப் படுத்தப்படாததே தொடர்ச்சியாக சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் எனவும் கருதப்படுகிறது.
ஆகவே, கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள் சிறார்கள் மீதான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கமாக எடுத்து விசாரிக்க வேண்டும்" என முறையிட்டார்.
இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.
