Published : 12 Oct 2020 11:51 AM
Last Updated : 12 Oct 2020 11:51 AM

வீதிக்கு ஒரு நவீன வாசகசாலை: திப்பணம்பட்டியில் புதிய முயற்சி

திப்பணம்பட்டி வன்னியசுந்தரபுரத்தில் திறக்கப்பட்டுள்ள நவீன வாசகசாலையில் ஆர்வத்துடன் படிக்கும் மாணவ, மாணவிகள்.

தென்காசி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் தளிர் அமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தவும், பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கம் மற்றும் கணினி அறிவை மேம்படுத்தவும் இந்த அமைப்பு சார்பில் வீதிக்கு ஒரு நவீன வாசகசாலை திறக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர்.

அதன்படி, திப்பணம்பட்டி வன்னியசுந்தரபுரத்தில் முதல் வாசக சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சுடலைமணி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் குணம், ஊர் பெரியவர் சண்முகம் முன்னிலை வகித்தனர். பா.தங்கராஜ் வரவேற்று பேசினார். ஆலடி அருணா கல்விக் குழும செயலாளர் எழில்வாணன் வாசகசாலையை திறந்து வைத்தார்.

இந்த வாசகசாலையில் 300 புத்தகங்கள், தினசரி செய்தித் தாள்கள், பிரிண்டருடன் கூடிய கணினி வசதி செய்யப்பட்டுள்ளது. திப்பணம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து வீதிகளிலும் படிப்படியாக நவீன வாசகசாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று, தளிர் அமைப்பினர் தெரிவித்தனர்.

விழாவில் எழுத்தாளர் தமிழன் பிரபாகர், ஆசிரியர் மாரிமுத்து, ராணுவ வீரர் சதீஷ், ஊராட்சி செயலர் நடராஜன், நூலகர் ரவிச்சந்திரன் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x