Published : 12 Oct 2020 07:41 AM
Last Updated : 12 Oct 2020 07:41 AM

பிற மாநிலங்களில் கரோனா அதிகரிப்பால் தமிழக எல்லைப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை

பிற மாநிலங்களில் கரோனா நோய் தொற்று அதிகரித்துள்ளதால், தமிழக எல்லைப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தினமும் 90,000 பேருக்குஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், கரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டு வருவதால், தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் உள்ளது.

சென்னையில் தற்போது இரவு நேரங்களிலும் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின்சிறப்பான நோய் தடுப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் கரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தனிமைப்படுத்தும் மையங்கள் மூடப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கரோனாநோயாளிகள் சிகிச்சை பெறும்வகையில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், தமிழக எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் மருத்துவக் குழுக்கள் மூலம் கூடுதலாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

3 வாரங்களுக்கு...

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் 1.6 சதவீதமாக இருந்த கரோனா இறப்பு விகிதம் தற்போது 1.3 சதவீதத்துக்கும் கீழ்குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து 3 வாரத்துக்கு முகக்கவசம் அணிந்தால் கரோனா தொற்றை முற்றிலுமாக குறைக்கலாம்.

மிகப்பெரிய மக்கள் இயக்கம்

தூத்துக்குடியில் அக்.13-ம் தேதிகரோனா குறித்த மிகப் பெரிய விழிப்புணர்வு மக்கள் இயக்க நிகழ்ச்சியை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x