

தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சர்வதேச வர்த்தக மைய அரங்கில் முதல்வர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார்.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுமார் 5 ஆயிரம் முதலீட்டாளர்கள் வந்து குவிந்துள்ளனர்.
தொழிலதிபர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுக்களின் தலைவர்களை தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி வரவேற்றார்.
ஊர்மிளா சத்தியநாராயணன் குழுவினரால் சிறப்பு ஒளிவிளக்கு நடனம் அரங்கேறியது. பின்னர், கண்கவர் 3டி நடனம் அரங்கேற்றப்பட்டது.
மாநாட்டுச் சின்னத்தை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி, 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை - உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 10 முக்கிய அம்சங்கள்
* இதுவரை, முதலீட்டாளர்கள் தாங்களாக வந்து தமிழக அரசை நாடி, ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வந்தனர். தற்போது தமிழகத்தில் முதல்முறையாக உலக முத லீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.
* மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் முதல்வர் ஜெயலலிதா, கண்காட்சி மற்றும் மிகப்பெரிய தொழில் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். தொழில்துறை செயலாளர் சி.வி.சங்கர் நன்றி தெரிவிக்கிறார்.
* இம்மாநாட்டின் மூலம், தமிழகத்தில் மாவட்ட அளவில் பல்வேறு சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் முதலீடுகளை அதிகரிக்கவும், பல நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் புதிதாக தமிழகத்தில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
* தமிழகத்தில் தொழில் தொடங்க எளிமையான வழிமுறைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள், வரி மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு உட்பட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் தனித்தனி அரங்குகளில் நடக்கின்றன.
* மாநாட்டில் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தவிர, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
* மாநாட்டுக்கு கொரிய நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* இந்த மாநாட்டின் மூலம் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறை, மருந்து தயாரிப்பு மற்றும் உயிரி தொழில்நுட்பம், வேளாண் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்கள், ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள், ஏரோஸ்பேஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள் கட்டமைப்பு, ரசாயனம், பெட்ரோலியம் மற்றும் கனிமம் சார்ந்த தொழில்கள், கனரக பொறியியல், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணு வன்பொருள் உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
* மாநாட்டையொட்டி நடத்தப் படும் கண்காட்சியில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.
* நாளை 2-ம் நாள் மாநாட்டிலும் காலையில் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, தமிழகத்துக்கு கிடைத்துள்ள தொழில் முதலீடுகள், ஒப்பந்தங்கள் குறித்து அறிவிப்பார். இந்த மாநாடு மூலம் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* மாநாட்டுக்கு தேசிய அளவில் பங்குதாரராக இந்திய தொழில் கூட்டமைப்பும் (சிஐஐ), நிகழ்ச்சி பங்குதாரராக இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையும் (பிக்கி) செயல்படுகின்றன.