Last Updated : 11 Oct, 2020 12:31 PM

 

Published : 11 Oct 2020 12:31 PM
Last Updated : 11 Oct 2020 12:31 PM

கரோனா பணியில் பெண் காவலருக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை தந்த புதுச்சேரி எஸ்.பி.யின் பணியிடை நீக்கம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

கரோனா பணியில் பெண் காவலருக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை தந்த புதுச்சேரி எஸ்.பி.யின் பணியிடை நீக்கம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கும் காவல்துறையின் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார்.

புதுச்சேரி திருபுவனை பகுதியில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதி சீல் வைக்கப்பட்டு போலீஸாரும், இந்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவு (ஐஆர்பிஎன்) காவலர்களும் பாதுகாப்புப் பணியில் கடந்த ஏப்ரலில் ஈடுபட்டிருந்தனர். இப்பணியில் புதுச்சேரி ஐஆர்பிஎன் துணை கமாண்டன்ட் ஆர்.சுபாஷும் (41) பணியில் இருந்தார். இவர் பதவி எஸ்.பி. பதவிக்கு இணையானது.

அப்போது திருபுவனை காவல்நிலைய பெண் காவலர் டிஜிபியிடம் அளித்த புகாரில், சுபாஷ் தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விசாரணை நடந்தது. அதில் பெண் காவலரிடம் சுபாஷ் தவறாக நடந்தது தெரிய வந்தது. திருபுவனை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஏப்ரலில் சுபாஷைக் கைது செய்தனர். அதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜாமீனில் சுபாஷ் வெளியே வந்தார்.

பெண் காவலருக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக கைதான ஐஆர்பிஎன் துணை கமாண்டன்ட் (காவல் கண்காணிப்பாளர்) ஆர்.சுபாஷின் பணியிடை நீக்கக்காலம் வரும் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து காவல்துறை தலைமையகம் புதிய கோப்பைத் தயாரித்தது. அதில் எஸ்.பி. சுபாஷின் பணியிடை நீக்கக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அக்கோப்பினை புதுச்சேரி அரசுக்கு அனுப்பியது. முதல்வர் ஒப்புதலுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அக்கோப்பு அனுப்பப்பட்டது. காவல்துறை தலைமையகம் அனுப்பிய கோப்புக்கு கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார். அதன்படி சுபாஷ் பணியிடை நீக்கம் நீட்டிப்புக்கான மூன்று மாத காலம் வரும் அக்டோபர் 17 முதல் தொடங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x