

பழவேற்காடு ஏரியை தூர்வாரி நேர்கல் சுவர் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஒவ்வோர் ஆண்டும் கோடைக் காலத்தில் மணல் திட்டுகள் ஏற்பட்டு முகத்துவாரம் அடைபடு வதால், அப்பகுதி மீனவர்கள் வங்கக் கடலுக்குள் சென்று தொழில்செய்ய இயலாத நிலைஏற்படுகிறது எனவும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி நேர்கல் சுவர்கள் மூலம் நிலைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை தொடர்ந்து வைத்து வருகிறார்கள்.
110 விதியின்கீழ்..
இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 2020-21-ம் நிதி ஆண்டில் 110 விதியின்கீழ் தமிழக முதல்வர் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கிராமத்தில் ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் பழவேற்காடு ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்தி நேர்கல் சுவர்கள் அமைத்து நிரந்தரமாக நிலைப்படுத்தப்படும் என அறிவித்தார்.
தற்போது தமிழக அரசால் இப்பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் நிலையில் உள்ளது.
இப்பணிகள் நிறைவேற்றப்படுவதால் பழவேற்காடு கிராம மீனவர்கள் ஆண்டு முழுவதும் எந்தவித சிரமும் இன்றி கடலுக்குச் சென்று தொடர்ந்து மீன்பிடி தொழிலை மேற்கொள்ள இயலும்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இப்பணிகள் நிறைவேற்றப்படுவதால் பழவேற்காடு கிராம மீனவர்கள் ஆண்டு முழுவதும் சிரமமின்றி கடலுக்குச் செல்லாம்.