

தென்காசியில் திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து காவல் சிக்னல் அருகே தொழிலதிபர் ஜெயபால் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 7-ம் தேதி பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
வீட்டில் தனியாக இருந்த ஜெயபாலின் மனைவி விஜயலெட்சுமியை மர்ம நபர்கள் கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தென்காசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து எஸ்பி சுகுணாசிங் உத்தரவிட்டார்.
ஜெயபால் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், அப்பகுதியில் உள்ள வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், சந்தேக நபர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சியும், அதில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தும், மற்றொருவர் பர்தா அணிந்தும் சென்றது தெரியவந்தது.
இருப்பினும், கொள்ளைச் சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் குற்றவாளிகள் சிக்கவில்லை. இந்நிலையில், தனிப்படை போலீஸார் தென்காசி ஆசாத் நகர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீஸாரைப் பார்த்ததும் அந்த வழியாக வந்த 3 பேர் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், தென்காசி அருகே உள்ள மேலமெய்ஞானபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27), ரமேஷ் (27), மேலக் கடையநல்லூரைச் சேர்ந்த அருள் சுரேஷ் (31) என்பது தெரியவந்தது.
அவர்கள் முன்னுக்குப் பின் பதிலளித்ததால் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள், தொழிலதிபர் ஜெயபால் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 126 பவுன் நகைகள் மற்றும் 2 இருசக்கரவாகனம், நான்குசக்கர வாகனம் ஒன்று மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
குற்றவாளிகளை கைது செய்த போலீஸாரை எஸ்.பி சுகுணாசிங், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் பாராட்டினர்.