Last Updated : 10 Oct, 2020 06:09 PM

 

Published : 10 Oct 2020 06:09 PM
Last Updated : 10 Oct 2020 06:09 PM

முதல்வர் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருந்தினர் மாளிகையில் சோதனை

முதல்வர் கே.பழனிசாமி கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு விருந்தினர் மாளிகை ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி வருகிற 13-ம் தேதி இரவு நாகர்கோவில் வருகிறார். அன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், மறுநாள் 14-ம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.

பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகள் குமரியில் மும்முரமாக நடந்து வருகிறது.

ஏற்கெனவே கடந்த மாதம் 23-ம் தேதி முதல்வர் பழனிச்சாமி வருவதாக இருந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, மற்றும் முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டிருந்தன.

சில சாலை பணிகள் இடையில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் 13-ம் தேதி முதல்வர் வரஇருப்பதை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த சாலை பணிகள் மீண்டும் நடந்து வருகிறது.

முதல்வர் வருகையை முன்னிட்டு எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் மெட்டல் டிடெக்டர், மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இப்பணிகளை எஸ்.பி. பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x