காரைக்குடி அருகே 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ஊருணியை சொந்த செலவில் தூர்வாரிய ஊராட்சி தலைவர்

மனச்சை கிராமத்தில் தூர்வாரும் பணி நடைபெறும் ஊருணி.
மனச்சை கிராமத்தில் தூர்வாரும் பணி நடைபெறும் ஊருணி.
Updated on
1 min read

காரைக்குடி அருகே 15 ஆண்டுகளாகத் தூர்வாரப் படாமல் இருந்த ஊருணியை தனது சொந்த செலவில் ஊராட்சித் தலைவர் தூர்வாரினார்.

காரைக்குடி அருகே வடகுடி ஊராட்சித் தலைவராக இருப்பவர் பாலசுப்ரமணியன். இவரது ஊராட்சிக்கு உட்பட்ட மனச்சை கிராமத்தில் திருச்சி-காரைக்குடி நெடுஞ்சாலை அருகே கல்வெட்டு ஆண்டாள் ஊருணி உள்ளது. இந்த ஊருணியை கிராம மக்கள் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த ஊருணி கடந்த 15 ஆண்டுகளாகத் தூர்வாரப்படவில்லை. இதனால் ஊருணியைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில் ஊருணியைத் தூர்வாரித் தர வேண்டும் என ஊராட்சித் தலைவரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அதற்கான நிதி இல்லை. அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை. இதையடுத்து ஊராட்சித் தலைவர் தனது சொந்த பணம் ரூ.2 லட்சத்தில் ஊருணியைத் தூர்வாரினார். அவருக்கு உதவியாக கிராம மக்களும், இளைஞர்களும் செயல் பட்டனர். ஊராட்சித் தலைவரின் இச்செயலை கிராம மக்கள் பாராட்டினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in