Published : 09 Oct 2020 04:35 PM
Last Updated : 09 Oct 2020 04:35 PM

தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் கரோனா பரவலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை: தமாகா யுவராஜா வலியுறுத்தல்

தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் கரோனா பரவலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவலைச் சமாளிக்க கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கரோனவை வேகமாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்று தமிழக எதிர்க்கட்சிகள் பாராட்டிவந்தன. ஆனால், தற்போது கேரளாவில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு அங்கு கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கேரளாவில் சமூகப் பரவல் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வாழ்வாதாரம் வேண்டி வரக்கூடிய மக்கள் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் அதிகரித்துக் காணப்படுகின்றனர்.

தமிழகத்தில் அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதுடன் இறப்பு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழகத்தில் அதிகப் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று யுவராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x