Published : 09 Oct 2020 12:30 PM
Last Updated : 09 Oct 2020 12:30 PM

கட்டப்படாத வீட்டுக்கு மத்திய அரசின் வாழ்த்து கடிதம்: குழப்பத்தில் அரியலூர் கூலித் தொழிலாளி குடும்பத்தினர்

பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில், அரியலூர் நகரைச் சேர்ந்த மாணிக்கம்(55) என் பவர் புதிய வீடு கட்டாத நிலையில், அவருக்கு புதிய வீடு பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து வந்துள்ள கடிதத்தால் மாணிக்கம் குடும்பத்தினர் குழப்ப மடைந்துள்ளனர்.

அரியலூர் குறிஞ்சான் குளம் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மாணிக்கம். இவருக்கு சொந்தமான வீட்டையும், அவருடைய அக்கா ராணியின் கூரைவீட்டையும் புதுப்பித்து கட்ட பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில் கடந்தாண்டு விண்ணப்பித்துள்ளார். தொடர்ந்து, அதிகாரிகள் களஆய்வு செய்து புதிய வீடு கட்ட அனுமதியளித்துள்ளனர். ஆனால், அப்போது போதிய பணம் கையிருப்பு இல்லாத காரணத்தால், புதுவீடு கட்டும் திட்டத்தை மாணிக்கமும், அவரது அக்கா ராணியும் கைவிட்டு உள்ளனர்.

இந்நிலையில், மாணிக் கத்துக்கும், அவரது அக்கா ராணிக்கும் மத்திய அரசின் பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்ட இணைச் செயலாளர் அமரீத் அபிஜத் கையொப்பம் இட்ட கடிதம் ஒன்று அண்மையில் வந்துள்ளது.

அந்த கடிதத்தில், "புதியவீடு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் என்றும், புதியவீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், திடக்கழிவு மேலாண்மை, பாதுகாப்பான குடிநீர், எரிசக்தி சேமிப்பு மற்றும் மரக்கன்று நடுதல் போன்றவற்றில் முக்கிய கவனத்தை செலுத்தவும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், புதியவீடு குழந்தை களுக்கு மேம்பட்ட கல்வியையும், சுகாதாரமான வாழ்க்கையையும், புதிய வாய்ப்புகளையும் பெற உதவியாய் இருக்கும் என்றும், சிறந்த வீடுகளை அங்கீகரிக்க வீட்டை புகைப்படம் எடுத்து செயலியில் ஏற்றி அனுப்பினால் விருது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில் மாணிக்கம் புதிய வீடு கட்டாத நிலையில், அவருக்கு இந்த கடிதம் வந்துள்ளதால், தனக்கு தெரியாமல் தனது பெயரில் மத்திய அரசிடம் இருந்து பணம் பெறப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி தவறு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது, பயனாளிகளின் பட்டியலை அனுப்புவதுடன் நகராட்சியின் பணிமுடிந்துவிட்டது. வீடு வழங் கப்பட்டதா, மானியம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக் கப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் தங்களிடம் இல்லை என்று கூறிவிட்டனர்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் போலி விவசாயிகள் பெயரில் பலகோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளது கண்டறியப்பட்டு, முறைகேடு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோன்று நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்திலும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதோ என்ற சந்தேகம் இந்த கடிதத்தின் மூலம் எழுந்துள்ளது. எனவே, மாநிலஅரசு உடனடியாக உரிய விசாரணை நடத்தி உண்மையில் வீடு கட்டியவர்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்பட்டுள்ளதா அல்லது போலிநபர்கள் உருவாக்கப்பட்டு மத்தியஅரசின் மானியம் பெறப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x