Published : 09 Oct 2020 12:37 PM
Last Updated : 09 Oct 2020 12:37 PM

விருப்பப்பட்டே எம்எல்ஏ பிரபுவைத் திருமணம் செய்தேன்; மணப்பெண் வாக்குமூலம்: கணவருடன் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை

ஆட்கொணர்வு மனு மீது நடந்த விசாரணையில் மணப்பெண் சவுந்தர்யா ஆஜரானார். விருப்பப்பட்டே எம்எல்ஏ பிரபுவைத் திருமணம் செய்தேன் என சவுந்தர்யா வாக்குமூலம் அளித்ததை அடுத்து, அவர் கணவருடன் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கள்ளக்குறிச்சி தனித் தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு (34). இவர் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சவுந்தர்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சவுந்தர்யா திருச்செங்கோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர்கள் காதலைப் பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1-ம் தேதி திடீரென சவுந்தர்யா வீட்டிலிருந்து மாயமானார்.

இந்நிலையில் மறுநாள் காலை பிரபு - சவுந்தர்யா திருமணம் நடைபெற்றது. அவர்களின் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. இதைக் கண்டித்து சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் ஏற்கப்படவில்லை எனத் தீக்குளிக்க முயன்றார்.

சவுந்தர்யாவைத் தான் காதலித்ததாகவும், அவரும் தன்னைக் காதலித்ததாகவும், முறைப்படி சவுந்தர்யா வீட்டிற்குப் பெற்றோருடன் சென்று பெண் கேட்டு அவர்கள் சம்மதிக்காததால் தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் சவுந்தர்யாவை மணமுடித்ததாகவும் பிரபு காணொலி வெளியிட்டார். அப்போது அவரது மனைவி சவுந்தர்யாவும் உடனிருந்தார்.

அதிமுக எம்எல்ஏ பிரபுவால் தன் மகள் கடத்தப்பட்டதாகக் கூறி, மகள் சவுந்தர்யாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை சுவாமிநாதன் கடந்த 5-ம் தேதி ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

இதற்கிடையே தான் கடத்தப்படவில்லை, விருப்பப்பட்டே பிரபுவை மணந்தேன் என சவுந்தர்யாவும் தனியாக காணொலி வெளியிட்டார்.

நேற்று மீண்டும் முறையீட்டின் பேரில் வழக்கை எடுத்த நீதிபதிகள் அமர்வு, சவுந்தர்யாவின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள அவரை நாளை மதியம் 2.30 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டது. சுவாமிநாதனையும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் ஆஜராகினர். அப்போது நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் ஆஜரான சவுந்தர்யா, தான் விருப்பப்பட்டே பிரபுவை மணமுடித்ததாகவும், தாம் பிரபுவுடன் வாழ விரும்புவதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை, தனது தந்தை சுவாமிநாதனுடன் செல்ல விரும்பவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது.

சுவாமிநாதன் தனது மகள் தன்னுடன் வரவேண்டும், அவரை மூளைச்சலவை செய்துள்ளார்கள் எனக் கூறியதாகத் தெரிகிறது.

இரண்டு தரப்பு கருத்துகளையும் பதிவு செய்த நீதிபதிகள், சுவாமிநாதன், சவுந்தர்யா இருவரையும் தனியாக அரை மணி நேரம் பேசி முடிவுக்கு வர அனுமதித்ததின் பேரில் இருவரும் பேசினர். பின்னர் நீதிபதிகள் முன் ஆஜரான இருவரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சவுந்தர்யா 18 வயது நிரம்பியவர் என்பதால் அவர் வாழ்க்கை குறித்து அவருக்கு முடிவெடுக்க உரிமை உள்ளதால் இதில் நீதிமன்றம் தலையிட எந்த முகாந்திரமுமில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், அவரை அவரது கணவர் பிரபுவுடன் செல்ல அனுமதி அளித்தது. தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x