தருமபுரி மாவட்டத்தில் கனமழை மின்னல் தாக்கியதில் வீடு சேதம்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த முரசுப்பட்டி கிராமத்தில் விவசாயி ஆனந்தன் என்பவரது வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் மேற்கூரை முற்றிலும் சேதமானது.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த முரசுப்பட்டி கிராமத்தில் விவசாயி ஆனந்தன் என்பவரது வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் மேற்கூரை முற்றிலும் சேதமானது.
Updated on
1 min read

அரூர், மொரப்பூரில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கியதில் விவசாயி வீட்டின் மேற்கூரை, மின் மோட்டார் உபகரணங்கள் சேதமடைந்தன.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மழையின் போது அரூர் அடுத்த செட்ரப்பட்டி ஊராட்சியில் உள்ள மொரசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கத்தால் அருகில் இருந்த வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக சேதமடைந்தது.

வீட்டின் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த ஆனந்தனின் மகன் சரனேஷ் (17) மீது மின்விசிறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சந்தப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வம் (35). இவர் கறவை மாடுகள் வளர்த்து வருகிறார். மழையின் போது, மின்னல் தாக்கி கறவை மாடு உயிரிழந்தது. மழையால் ஏற்பட்ட சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அரூரில் 24, பாப்பிரெட்டிப்பட்டியில் 10.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை பகுதியில் 2மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரியில்நேற்றுபகலில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 252 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனக் கால்வாய்கள், ஆற்றின் வழியாக விநாடிக்கு 114 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 44.15 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in