

கோவை சாடிவயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைவாழ் கிராமங்களில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று ஆய்வு செய்தார். வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மலைவாழ் மக்களிடம் கேட்டறிந்தார். சாடிவயல்பதி கிராமத்தில் வயலில் நாற்று நடவு செய்துகொண்டிருந்த மக்களை சந்தித்த அமைச்சர், அவர்களுடன் சேர்ந்து வயலில் இறங்கி நாற்று நடவு செய்தார்.
செருப்பை கழற்றிவிட்டு, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நாற்று நடவு செய்த அமைச்சரை, அப்பகுதி மக்கள் பாரம்பரிய பாடல்களை பாடி வரவேற்றனர். சிறிது நேரம் நாற்று நடவு செய்த பின்னர், மக்களின் கோரிக்கைகளை கேட்ட அமைச்சர், அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து சாடிவயல் பதியில் மின்கலன் வேலி அமைப்பதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன் சொந்த நிதியில்இருந்து ரூ.23 ஆயிரம் வழங்கினார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.