தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு: கோவில்பட்டி நீதிமன்றத்தில் மேலும் இருவர் ஆஜர்

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட  பேச்சி, கருப்பாமி ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கோவில்பட்டி நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்
தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேச்சி, கருப்பாமி ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கோவில்பட்டி நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்
Updated on
1 min read

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி போலீஸார் கோவில்பட்டி நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சாத்தான்குளம், தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன்(35).

இவரது குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் தொடர்பாக இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் என்பவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் செப்.17-ம் தேதி செல்வன் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி டி.எஸ்.பி. அணில்குமார் தலைமையிலான போலீஸார், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதில், கைது செய்யப்பட்ட சின்னத்துரை, முத்துராமலிங்கம், சரணடைந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கடந்த 30-ம் தேதி முதல் அக்.6-ம் தேதி வரை காவல் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர்.

இவர்கள் 4 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பேச்சி மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் பிடிக்க சிபிசிஐடி டி.எஸ்.பி. அணில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து திருமணவேல் உள்ளிட்ட 4 பேரும் கடந்த 6-ம் தேதி இரவு 11 மணியளவில் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண்-1ல் ஆஜர்படுத்தினர். அவர்களை 4 பேரையும் அக்.19-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்ட புத்தன்தருவை கஸ்பா தெருவை சேர்ந்த பேச்சி(43), தாமரைமொழி சன்னதி தெருவை சேர்ந்த கருப்பசாமி(46) ஆகிய இருவரை நேற்று சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து இருவரையும் இன்று கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண்-1ல் ஆஜர்படுத்தினர். நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தி, பேச்சி, கருப்பசாமி ஆகியோரை தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறை சாலையில் அக்.22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in