

திமுக மூழ்கும் கப்பல். 2021-ல் திமுகவால் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
மதுரை பாண்டிகோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நவம்பர் மாத்துக்குள் பாஜக பூத் அளவில் கட்டமைக்கப்படும். திமுகவுக்கு யாரும் ஆதரவாக இல்லை. திமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
திமுக கலக்கத்தில் உள்ளது. திமுக மூழ்கும் கப்பலாக மாறி வருகிறது. 2021-ல் திமுக ஆட்சியமைக்க முடியாது. தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை பாஜக தலைமை மட்டுமே அறிவிக்கும்.
இரு ஆடுகள் முட்டிக் கொண்டால் நரிகளுக்கு சந்தோஷம் வரும். அந்த வகையில் அதிமுகவில் பிரச்சினைகள் சுமுகமாக பேசி தீர்க்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்தரப் பிரதேச பாலியல் சம்பவத்தில் அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்துள்ளது. அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தலாம். நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் எதிர்க்டசிகள் போராட்டம் நடத்துவது அரசியல் நாடகம்.
இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.
திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்த கேள்விக்கு ஹெச்.ராஜா பதிலளிக்க மறுத்துவிட்டார்.