12 மாவட்டங்களில் கனமழை, 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

12 மாவட்டங்களில் கனமழை, 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
2 min read

அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (அக்.10) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் உள்பட ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்,

சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி (09.10.2020) நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் அக்டோபர் 9 ஆம் தேதி, அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும். அதனை அடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

குப்புநத்தம் (கடலூர்) 14 செ.மீ., காட்டுமன்னார்கோவில் (கடலூர்), மே.மாத்தூர் (கடலூர்) தலா 11 செ.மீ., விருதாச்சலம் (கடலூர்), பிளந்துறை (கடலூர்), தலா 9 செ.மீ., ஆலங்குடி (புதுக்கோட்டை) 8 செ.மீ., கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), நாமக்கல், மயிலாடுதுறை (நாகப்பட்டினம்) தலா 7 செ.மீ.

அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (10.10.2020) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

அக்டோபர் 9 முதல் 11 ஆம் தேதி வரை மத்திய வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 10,11 ஆம் தேதிகளில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 12 ஆம் தேதி அன்று மத்திய மேற்கு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் அந்தத் தேதிகளில் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் இப்பகுதியில் இருந்து இன்று இரவுக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு ஏதுமில்லை”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in