Published : 08 Oct 2020 11:50 AM
Last Updated : 08 Oct 2020 11:50 AM

மாநகரில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கருத்தடை மையத்தை விரைவில் திறக்க வலியுறுத்தல்

கோவை

கோவை மாநகரில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஒண்டிப்புதூர் கருத்தடை மையத்தை விரைவில் திறக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் கடந்த 2006-ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின்படி, மாநகரில் 70,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது. தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, சீரநாயக்கன்பாளையத்திலும், உக்கடத்திலும் ‘கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள்’ தொடங்கப்பட்டன. இந்த மையங்களில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் மூலம், மாநகரில் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு, பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்ப விடப்பட்டன.

கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் உக்கடத்திலுள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மூடப்பட்டது. இங்கு 4 மண்டலங்களுக்கு உட்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வந்ததால், மையம் மூடப்பட்ட பின்னர் மேற்கண்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ராஜ்குமார் கூறும்போது,‘‘ மாநகரில் ஆண்டுக்கு சராசரியாக 500-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடி பாதிப்பின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தெரு நாய்கள் உள்ளன. ஒவ்வொரு வீதியிலும் குறைந்தது 4 தெருநாய்கள் உள்ளன. இவை இரவு நேரங்களில் நடந்து செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன. திடீரென சாலைகளின் குறுக்கே பாய்ந்து வாகன ஓட்டுநர்களுக்கு விபத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த ஒண்டிப்புதூரில் கட்டப்பட்டுள்ள கருத்தடை அறுவைசிகிச்சை மையத்தை விரைவில் திறக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘தெருநாய்கள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்க சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே, 50 சென்ட் பரப்பளவில் ரூ.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தெரு நாய்களுக்கான கருத்தடை மையம் விரைவில் திறக்கப்படும். இம் மையத்தில் மருத்துவர் அறை, அறுவைசிகிச்சை அறை, தெரு நாய்களை அடைத்து வைக்க 9 கூண்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் ஒப்பந்த நிறுவனம், ஒரு தெரு நாய்க்கு கருத்தடை செய்தால், ரூ.444 வழங்க அரசு அனுமதியளித்துள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x