Last Updated : 07 Oct, 2020 05:40 PM

 

Published : 07 Oct 2020 05:40 PM
Last Updated : 07 Oct 2020 05:40 PM

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன? என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. ஷேர் ஆட்டோக்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். பொது இடங்களில் கூட்டமாக நிற்கின்றனர்.

எனவே, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும், ஊரடங்கு நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் தான் அதிகளவில் கரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன.

கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசமும் வழங்கியுள்ளது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என முன்களப்பணியாளர் கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை.

விடுமுறை நாட்களில் இறைச்சிக் கடைகளிலும், மீன் கடைகளிலும் காணப்படும் கூட்டம் கரோனாவை வரவேற்பது போல் உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், தேவையில்லாமலும் சுற்றுகின்றனர். எனவே, முக கவசம் அணியாதவர்கள் கைது செய்யப்படுவர் என அறிவிக்க வேண்டும். அபராதத் தொகையை ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் என உயர்த்த வேண்டும் என்றனர்.

பின்னர், முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதான நடவடிக்கையை கடுமையாக்குவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நவ. 6-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x