Published : 07 Oct 2020 04:05 PM
Last Updated : 07 Oct 2020 04:05 PM

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி அடங்கிய அமர்வு, கரோனா பேரிடர் காலத்தைக் கருத்தில் கொண்டு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் ஆலைகளும் தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என இடைக்கால உத்தரவிட்டனர்.

மேலும், இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதத்தை ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசுக்கு வழங்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (அக். 7) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் அளித்த விண்ணப்பங்கள் மீது எடுத்த முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

அதில், குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்க முடியாத பகுதிகளில் இருந்து (Over exploited and critical) பெறப்பட்ட 396 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மீண்டும் தடையில்லா சான்று வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்கக்கூடிய (Safe மற்றும் Semi critical) பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 690 நிறுவனங்களில் 510 செயல்பட தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் 15 சதவீதத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவை 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தியதாகவும், மீதமுள்ள 367 நிறுவங்கள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை எனவும் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்காத நிறுவனங்களை மேற்கொண்டு செயல்பட அனுமதிக்க வேண்டியதில்லை என்றும், உடனடியாக மூட உத்தரவிடலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

நிலத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளைவை கணக்கிடும் Flow meter எனும் கருவியை பொருத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு ஏன் கொள்கை முடிவெடுக்கவில்லை எனவும் அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் சிவமுத்து தரப்பில், சென்னையில் மட்டும் விதிகளை மீறி அளவுக்கு மீறி அதிகளவில் தண்ணீர் எடுத்து வரும் 40 நிறுவனங்களின் பட்டியலை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இதே போன்று தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து 4 வாரங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், உரிமம் பெறாமலும் புதுப்பிக்காமலும் இயங்கி வந்த தண்ணீர் நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கிய சலுகையை திரும்ப பெற்று கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை கணக்கிடும் கருவிகள் பொருத்த கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நவம்பர் 19 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x