Published : 07 Oct 2020 07:29 AM
Last Updated : 07 Oct 2020 07:29 AM

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீரின் அளவு விநாடிக்கு 2,200 கன அடியாக அதிகரிப்பு

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தபடி சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநில அரசு கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத் துக்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும் கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும்.

ஆனால், கண்டலேறு அணையின் நீர் இருப்பு குறைவால் நடப்பு ஆண்டுக்கான முதல் தவணையாக கடந்த ஜூலையில் வழங்க வேண்டிய நீரை அணையில் இருந்து ஆந்திர அரசு திறக்கவில்லை.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழையால் ஆந்திராவின் சைலம், சோமசீலா, கண்டலேறு அணைகளில் போதிய நீர் இருப்பு காரணமாக, சென்னை குடிநீர் தேவைக்காக நடப்பு ஆண்டுக்கான கிருஷ்ணா நீரை கடந்த மாதம் 18-ம் தேதி முதல் ஆந்திர அரசு திறந்து வருகிறது .

தொடக்கத்தில் விநாடிக்கு 1,500 கன அடி என திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த மாதம் 20-ம் தேதி முதல் விநாடிக்கு 2, 000கன அடி என திறக்கப்பட்டது. பிறகு கடந்த 27-ம் தேதி முதல் விநாடிக்கு 1,700 கன அடியானது.

இதைத் தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பு கடந்த மாதம் 29-ம்தேதி விநாடிக்கு 2,050 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், சென்னை குடிநீருக்காக கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீரின் அளவு விநாடிக்கு 2,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த கிருஷ்ணா நீர், கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு நேற்று காலை விநாடிக்கு 764 கன அடி அளவில் வந்து கொண்டிருக்கிறது. அந்த நீர் பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 660 கன அடி அளவில் வருகிறது.

இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி 989 மில்லியன் கன அடியாக உள்ளது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x