

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 9 ஆம் தேதி அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும். அதனை அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:
கோடநாடு (நீலகிரி) 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அக்டோபர் 9-ம் தேதி அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
அக்டோபர் 10-ம் தேதி அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 8-ம் தேதிக்குள் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர் அலை முன் அறிவிப்பு ஏதும் இல்லை”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.