கரோனா காலத்திலும் 614 இதய நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனை சாதனை

கரோனா காலத்திலும் 614 இதய நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனை சாதனை
Updated on
1 min read

கரோனா காலத்திலும் கோவை அரசு மருத்துவமனையில் 614 இதய நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் பி.காளிதாஸ் கூறியதாவது:

''தொற்று அச்சம் காரணமாக மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தாலும், இதயநோய் போன்ற தீவிர நோய்களைக் கவனிக்காமல் இருக்கக்கூடாது.

இந்தப் பேரிடர்க் காலத்தில் கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையில் 17 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், 614 மாரடைப்பு நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 214 பேருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் 49 நபர்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி ஸ்டென்ட் பொருத்துதல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயத் துடிப்பு குறைபாடு உள்ள 2 பேருக்கு நிரந்தர பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 2,956 பேருக்கு எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதயவியல் துறை சார்பில் உலக இதய தினத்தை முன்னிட்டு தேசிய நல்வாழ்வு இயக்கம் மற்றும் தமிழ்நாடு மாரடைப்பு தடுப்புத் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து இதய நோய்த் தடுப்பு முறைகள் குறித்து ஆன்லைன் மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், கோவை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்தக் கருத்தரங்கில் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இதயவியல் துறை மூத்த பேராசிரியர் ஜி.ஜஸ்டின்பால் உரையாற்றினார். இதில், கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஜெ.நம்பிராஜன் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு டீன் டாக்டர் பி.காளிதாஸ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in