Published : 05 Oct 2020 05:15 PM
Last Updated : 05 Oct 2020 05:15 PM

அக்.31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் 

சென்னை கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர் நல அமைப்பைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் முன்பு விசாரணை நடத்திய நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மெரினா கடற்கரை பராமரிப்பு குறித்து சென்னை மாநகராட்சிக்குக் கேள்விகள் எழுப்பியிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் செப்.29 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா? எனக் கேள்வி எழுப்பினர். மெரினாவில் பொதுமக்களை இன்னும் அனுமதிக்கவில்லை என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது. அதேசமயம் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அக்டோபர் 5-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்குப் பதிலாக புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் அறிக்கையாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையைச் சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ்.ரமேஷ் அடங்கிய புதிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், “மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிக் கடைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் இருமுறை திறக்கப்படவில்லை. நவம்பர் 9-ம் தேதி இந்த டெண்டர்கள் திறக்கப்படும். அதில் மூன்று கம்பெனிகள் டெண்டர் கோரியுள்ளன.

சென்னை கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தள்ளுவண்டிக் கடைகளுக்கான டெண்டர் கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரினாவைத் திறப்பது உள்ளிட்டவை தொடர்பான அறிக்கையை நவம்பர் 11-ம் தேதிக்குள் அளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x